Showing posts with label சாவர்க்கர். Show all posts
Showing posts with label சாவர்க்கர். Show all posts

Wednesday, May 22, 2019

ஊர் இரண்டு பட்டால்

கோட்சே 1948க்கு பின்  மீண்டும் அதிகம் உச்சரிக்கப் படுகிறது ஆனால் இதுவும் எய்தவனை விடுத்து அம்பை குற்றம் சொல்லும் செயல். கோட்சேவோடு குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் கோல்வாக்கர், விநாயக் தாமோதர் சாவர்கர்.

கோல்வாக்கர் அன்றைய ஆர்.ஸ்.ஸ் தலைவர். 1948'ல் தடைசெய்யப்பட்டது இக்கட்சி ஆனால் இன்று 3000 கோடியில் நர்மதா ஆற்றங்கரையில் நிற்கும் அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேலுடனான கடித வாதப்பிரதிவாதத்தில் தனக்கும் கட்சிக்கும் கோட்சேவோடு எந்த தொடர்பும் இல்லை என சொல்லி தடை நீக்கப்பட்டது. ஆர்.ஸ்.ஸோடு தொடர்பு இல்லாத கோட்சேவின் அஸ்தி அகண்ட பாரதத்தில் கரைய வேண்டி அதன் தலை அலுவலகத்தில் தான் இருக்கிறது இன்றும்.

சாவர்கர் - அந்தமான் சிறையில் சிலை, பெயரில் விமான நிலையம். இவர் சாதித்தது - Indian House என்ற இங்கிலாந்தில் இருந்த மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் இந்திய சுதந்திரத்திற்க்கு செயல்பட்டவர்களில் ஒருவர். அதற்க்காக கைதி செய்யப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். பின் இவர் ஆங்கில அரசுக்கு எழுதிய கருணை மனுவில் 'இனி ஒருபோதும் அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன். உங்கள் காலனி ஆதிக்கத்திற்கு அடங்கியே இனி என் செயல்பாடுகள் இருக்கும்' என எழுதி 1924'ல் விடுதலை அடைந்து காந்தியை விமர்சிக்க ஆரம்பித்தார். 1937ல் இந்து மகாசபை தலைவரானார். இன்று 2019ல் இதன் தேசிய செயலாளர் பூஜா பாண்டே காந்தியின் நினைவு நாளில் அவரின் உருவ பொம்பையை சுட்டு ஆதரவாளர்களோடு கொண்டாடுகிறார்.

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் துவங்கி இருந்தது. அதனை எதிர்த்து  இந்துக்களே ஒன்று கூடுங்கள் ஆங்கில  அரசோடு இணைத்து  போர்புரிவோம் என்ற வீரர் இவர். அந்த போரில் ஆங்கில அரசு எதிர்த்தது ஜெர்மனியின் நாசி படைகளை. இதற்க்கு முன்னர் ஹிட்லரின் கொள்கைகளை விமர்சித்த நேருவை 'பண்டிதர் நேருவை விட ஜெர்மனிக்கு எது தேவை என ஹிட்லருக்கு தெரியும்' என அவரின் கொள்கைகளை ஆதரித்தவரும் இவரே.

இவர்களுக்கு முன்னோடி 1906'ல்  துவங்கிய அகில இந்திய முஸ்லீம்  லீக். இந்து முஸ்லீம் இடையேயான மோதல் 1671 அவ்ரங்கஜிபின் மதம் சார்ந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது துவங்கி தொடர்ந்து வருகிறது. இந்த வெறுப்பை ஆதாயமாக்க எண்ணியவர்கள் பலர். கலவரங்கள் பெருகிய காலத்தில் இந்தியாவை இரு துண்டாக்கக் கேட்டவர் ஜின்னா. அதற்க்கு ஒத்திசைத்தவர் பட்டேல் அதை எதிர்த்தவர் காந்தி.

இறுதியாக பிரிவினை என முடிவு செய்த போது காந்தி சொன்னது இந்தியா இந்துக்களுக்கானாது மட்டும் அல்ல பாக்கிஸ்தான் முஸ்லீம்களுக்கு மட்டும் ஆனது அல்ல என்றே கூறினார். கலவரங்கள் முடிய உண்ணா நோன்பு இருந்தார்.  கலவரம் ஓய்ந்தபாடில்லை காந்தியின் உடலும் மோசமானது. நெடிய வாதத்திற்கு பின் யாரும் மதம் சார்த்த எந்த கலவரத்திலும் ஈடுபடமாட்டோம் என கையெழுத்து வாங்கச் சொன்னார் காந்தி. அதில் சாவர்க்கரின் இந்து மகாசபை கையெழுத்து இடவில்லை.

இந்த இரு பெரும் ஹிந்துத்துவதின் பிள்ளை தான் இன்றைய பாஜக. கோட்சே ஒரு தேச பக்தன் என்கிறார் சத்வி பிரக்யா அதை மன்னிக்கக்கூட மாட்டேன் என்கிறார் மோதி. ஆனால் பாஜக சார்பாக அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இடுகிறார்.

பிரிந்து சென்ற பாகிஸ்தானிலில் இந்துக்கள் கொல்லப்பட்டால் அவர்களை காப்பாற்ற இந்து பாதுகாவலர்கள் பாகிஸ்தான் செல்லாது இங்கு இருக்கும் முஸ்லீம்களை கொல்வது என்னை ஒருவன் அடித்து விட்டான் அவன் மொட்டை தலையுடன் இருந்தான் ஆகா மொட்டை அடித்த அனைவரையும் அடிப்பது இல்லை கிடைப்பவனை மொட்டை அடித்து வெளுப்பது. இதே தான் ஒவ்வொரு முறையும் காவேரியில் தண்ணீர் கேட்க்கும் போதும் அதன் கொள்ளளவு, மொத்த தேவை என்ன என ஏதும் அறியாது அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில் கன்னட தமிழர் கலவரம் ஆண்டு தோறும் நடந்தேறுகிறது.

எங்கெல்லாம் இரு குழுக்கள் மோதல் இருக்கிறதோ அதை சாதகமாக்கிக் கொள்ள ஒரு சந்தர்ப்பவாதி இருப்பான். அதில் பலியாவது கோட்சேகள் மட்டும் அல்ல வாக்கு செலுத்தினால் எல்லாம் மாறும் என்று நம்பியே வாழும் மக்களும் தான்.