Saturday, January 14, 2017

தடைகளை தகர்க்க ..

தீபாவளி நேரம் இரவு பத்து மணிக்கு ஊருக்கு கிளம்பினேன், ஆட்டோ எதுவும் கிடைக்க வில்லை. தீபாவளி கூட்டம் இருக்கும் திரும்ப முடியாது என மறுத்தனர். சில நிமிட அலைச்சலுக்கு பின் ஒரு வழியாக கிட்டியது. பத்து வாரத்துக்கு பின் இந்த வழியாக வருவதாக சொன்னார் ஓட்டுநர். இதற்கும் அவர் சேர் ஆட்டோ ஓட்டுபவர், ‘ரெண்டு பக்கமும் திறந்து வெச்சிருக்கானுங்க சார். காலைல இருந்து சம்பாதிக்கறது எதுவும் வீட்டுக்கு எடுத்துட்டு போக முடியல’ என்றார். நல்லது பத்து மணிக்கு மேல் தான் அவரை அழைத்து வந்திருக்கிறேன் நிம்மதியாக ஊருக்கு போய் சேர்ந்தேன்.

கள்ளுண்ணாமை என சொல்லி கள் இரக்குதல் தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து கள்ளச்சாராயம் வீதிக்கு வந்தது, அதனால் உயிர் பலிகள் அதிகரித்தது. இதை சரி செய்ய என மதுபான கடைகள் அரசாங்க அனுமதியோடு வந்து இன்று அதை அரசே பொறுப்பேற்று தெருவுக்கு ஒன்றாய் நடத்தியும் வருகிறது.

கள்ளு, கள்ள சாராயம், மேற்க்கத்திய மது பானங்கள் எல்லாமுமே போதை தரும். ஆனால் அது உடலில் செயல்படும் முறை வெவ்வேறு மாதிரி இருக்கும்.

கள், தென்னை மற்றும் பனை என மரங்களில் இருந்து இரக்கப்படுகிறது. உடல் சூட்டை நீக்கக் கூடியது. மேற்க்கத்திய மது பானங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும். அவர்கள் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு அது உகந்ததாக அவர்கள் பாரம்பரியத்தோடு விழாக்களில், திருமணங்களில் கூட இருக்கும்.இப்படி சூட்டை கிளப்பும் மதுவை நம் ஊர் தட்பவெட்ப நிலைக்கு குடிக்க உடல் கெட்டுவிடுகிறது.

கள்ளைத் தொடர்ந்து சேவ சண்டை தடை செய்யப்பட்டது. கோழி வளர்த்தால் முட்டை காசு கொடுக்கும், கோழியும் ஒரு வயதில் கறியாகி காசாகும். சேவல் சண்டைக்கு என வளர்க்கப்பட்டு, அது கோழிகளோடு கூடி நாட்டு கோழி முட்டையிட்டு வந்தது. சேவ சண்டை முற்றிலும் தடை செய்யப்பட நாளடைவில் நாம்  ப்ராயிளர் கோழிக்கு மாறி விட்டோம். வியாதிகளும் பெற்று விட்டோம். நாட்டு கோழி வளர்த்தவர்கள் நிலை மறந்து விட்டோம்.

இன்று சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. நாளையே காளைகள் அடி மாடுகளாகாது. பசுவுக்கு கருவூட்ட சினைகள் விற்கும் நிறுவனங்கள் பெருகும். அடுத்த தலைமுறை இனி காளை எதற்கு வளர்க்க வேண்டும் கருவூட்ட சினைகள் ஊசியில் ஏற்றப்படும் போது என கணக்கிட்டு காளைகள் வளர்ப்பு நிறுத்தப்படும். நாட்டு மாடுகள் வெளி நாட்டு காளையின் கன்றுகளை ஈன்று எடுக்கும். இப்படி நாட்டு மாடுகள் மெல்ல மெல்ல வெளி நாட்டு மாடுகளாக மாறிவிடும்.

வெளி நாட்டு உணவு என்பது தீங்கு இல்லை, ஆனால் உடல் உறுப்புகள் நாம் வாழும் இடத்திற்கு ஏற்ப அதன் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றார் போல் மாறுபட்டிருக்கும். எனவே நாம் வாழும் மண்ணில் ஏறத்தாள 400 மையில் சுற்று வட்டாரத்தில் விளையும் உணவுகள் நம் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். மேற்க்கத்திய உணவுகள் தீங்கானவை இல்லை அது நம் உடலுக்கு ஒவ்வாதவை.

எனவே கள்ளை முற்றிலும் தடை செய்யாது அரசே கள்ளுக்கடைகளை இப்போது மேற்கத்திய மது பானங்கள் விற்பது போல் நடத்தி இருக்கலாம், பனை மரங்கள் மிஞ்சி இருக்கும். சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் என கணக்கிடப்பட்டு உள்ளது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி அதிகரித்திருக்கும். 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது.

இன்று இவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளி நாம் அந்நிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றிருக்கிறோம் என்பது நிதர்சனம். அந்நிய முதலீடு நாட்டின் வளர்ச்சி இல்லை வீழ்ச்சி தான். கிழக்கிந்திய நிறுவனம் பதினேழாம் நூற்றாண்டில் முதலீடு செய்ததின் பலன் சும்மார் 200 ஆண்டுகள் அடிமை இந்தியா. இது இன்னும்மொரு படை எடுப்பே வளர்ச்சி இல்லை.

பாரம்பரியம் முற்றிலும் தடை செய்யப்படும் போது அதன் விளைவுகள் கட்டாய மாற்றமாக இருக்கும். எந்த மாற்றம் நிகழும் போதும் அழிவுகள் அதிகம் இருக்கும். அதில் மிஞ்சியவையே மாற்றத்திற்கு உட்பட்டு வளரத் துவங்கும். இப்போது தேவை இல்லாத மாற்றத்தினால் அழிவுக்கு கட்டாயமாக தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இத்தகைய நிலையை தடுக்க, கள்ளுக்கடை, சல்லிக்கட்டு போன்றவை தகுந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு தொடரப் படவேண்டும். அதை விடுத்தது முற்றிலும் தடை என்பது அறிவுள்ளவன் செய்யும் செயல் இல்லை.


No comments:

Post a Comment